Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆசிரியர்களுக்கு டீ, பிஸ்கட், மதிய உணவு ‘கட்’; வேணும்னா சொந்த செலவுல பண்ணிக்குங்க!!

‘யானை வாங்கியும் அங்குசம்
வாங்க காசில்லை’ என்ற கதையாக,
ஆசிரியர்களை உலகத்தரத்திற்கு உயர்த்தும்
அரசின் நோக்கம் ஒருபுறம் இருந்தாலும்,
தேநீர், பிஸ்கட், மதிய உணவு போன்ற
சலுகைகளை திடீரென்று நிறுத்தியது
ஒட்டுமொத்த ஆசிரியர்
சமுதாயத்தினரிடையேயும்
கடும் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.

 

அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்பு அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் சார்பில் பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக ஆங்கில பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. கடந்த கல்வி ஆண்டு முதல், அனைவருக்கும் கல்வித் திட்டமானது, ‘அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (சமக்ர சிக்ஷா) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் இந்தாண்டு, அரசுப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு ஆங்கிலப்பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஆங்கில எழுத்துகள், சொற்களின் ஒலிப்பு முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக ‘ஜாலி ஃபோனிக்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

 

சேலம் மாவட்டத்தில், ஜாலி ஃபோனிக்ஸ் பயிற்சி முகாம் நேற்று (ஜூன் 19, 2019) தொடங்கியது. இது, இரண்டு நாள் பயிற்சி முகாம். ‘ஏ’ முதல் ‘இஸட்’ வரை ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி, ‘இஇ’ சேர்ந்து வரும் இடங்களிலும், ‘ஐஇ’ எழுத்துகள் சேரும்போதும், ‘ஓஓ’, ‘ஓஐ’, ‘கியூயு’, ‘ஓயு’ உள்ளிட்ட எழுத்துகள் அடுத்தடுத்து வரும் சொற்களையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என நுட்பமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 42 எழுத்துகளின் ஒலிப்பு முறைகள் குறித்து இந்த முகாமில் பயிற்றுவிக்கப்படுகிறது.

 

இப்பயிற்சி முகாம், ஆசிரியர்களிடையே பேரார்வத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதேவேளையில், மதிய உணவு, தேநீர் போன்றவற்றை அவரவர் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை அவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

பயிற்சி முகாமிற்கு வரும்
முதல் வகுப்பு ஆசிரியர்கள்
ஒவ்வொருவரும் ஆங்கில பாடப்புத்தகம்,
குறிப்பேடு, தேர்வு எழுதுவதற்கான
மூன்று ஏ4 தாள்கள் ஆகியவற்றை
தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று
பயிற்சி முகாமிற்கு இரு நாள்களுக்கு முன்பே,
ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு
இருந்தது. மதிய உணவு மற்றும் தேநீர்
ஆகியவற்றுக்கு அவரவர் சொந்தமாக
செலவு செய்து கொள்ள வேண்டும் என்றும்
கல்வித்துறை அதிகாரிகள் ரொம்பவே
கறாராக அறிவுறுத்தி இருந்தனர்.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சில ஆசிரியர்கள்,
”முன்பெல்லாம் காலை, மாலை ஆகிய
இரு வேளைகளிலும் பயிற்சி வகுப்புகள்
நடத்தப்பட்டால், மதிய உணவும்,
இரண்டு வேளைக்கான தேநீர்,
பிஸ்கட்டுகளை பயிற்சி முகாம்
ஏற்பாட்டாளர்களே வழங்கி விடுவார்கள்.
இதற்கான செலவுத்தொகை, சில்லரை செலவின
பட்டியலில் ஒதுக்கப்படும். மதிய உணவு
வழங்காமல் போனாலும், இரண்டு வேளை
தேநீர், பிஸ்கட்டுமாவது ஏற்பாடு
செய்திருப்பார்கள்.

 

ஆனால் பயிற்சி முகாமிற்கு வரும்
ஆசிரியர்களே தேநீர், மதிய உணவுக்கான
செலவுகளை செய்து கொள்ள வேண்டும்
என்று அறிவுறுத்தி இருப்பது இதுதான்
முதல்முறை. இதற்கு முன்பு, பிரிட்டிஷ் கவுன்சில்
சார்பில் வழங்கப்பட்ட பயிற்சியின்போதுகூட
இதுபோன்ற கெடுபிடிகள் கிடையாது.
பள்ளிக்கல்வித்துறை செய்யாவிட்டாலும்கூட,
ஜாலி ஃபோனிக்ஸ் நிறுவனமாவது
அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க
வேண்டும். அவர்களும் ஏனோ செய்யவில்லை.

 

பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் ஒரு துறையில், இதையெல்லாம் பெரிய செலவாக கருதுவது வியப்பாக இருக்கிறது. அதேநேரம், தமிழக அரசு, ஆசிரியர்களின் நலன்களையும், சில சலுகைகளையும் தொடர்ந்து நசுக்கி வருகிறது. அந்த வகையில்தான் தேநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யாதது குறித்தும் அணுக வேண்டியதாக இருக்கிறது,” என்றனர்.

 

பல இடங்களில் பயிற்சி
முகாமிற்கான இடம் கட்டடத்தின்
இரண்டாவது தளத்தில் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், ஆசிரியர்களுக்கு தரை
தளத்தில்தான் தேநீர், மதிய உணவுக்கான
இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால்
பெண் ஆசிரியர்கள், குறிப்பாக மாதவிலக்கு
கால அவஸ்தையில் இருக்கும்
பெண் ஆசிரியர்களால் இரண்டாம் தளத்தில்
இருந்து தரை தளத்திற்கு தேநீருக்காக
வர ரொம்பவே சிரமத்திற்கு ஆளாகியுள்ள
நிகழ்வுகளும் நடந்துள்ளன.
ஒருங்கிணைந்த கல்வி என்றெல்லாம்
சிந்திக்கும் அரசு,
பெண் ஆசிரியர்களின் நலன்களையும்
ஒருங்கிணைத்துச் செயல்பட்டிருக்கலாம்
என்ற பேச்சும் எழாமல் இல்லை.

 

– பேனாக்காரன்