Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: 8 வயது சிறுமியிடம் ஆசிரியர் பாலியல் வக்கிரம்!

 

சேலத்தில் தன்னிடம் படித்து வரும் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்ட கணித ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சாலையில் இழுத்துப்போட்டு செருப்பால் அடித்து துவைத்தனர்.

சேலம் மூன்று ரோடு அருகே ஸ்ரீவித்யா மந்திர் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஸ் (24) கணிதப்பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

இதே பள்ளியில் அரிசிபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 8 வயது மகள், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். இன்று (செப். 1, 2018) காலை மாணவி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை? என்று சிறுமியிடம் பெற்றோர் கேட்டதற்கு, பள்ளியில் உள்ள கணித ஆசிரியர் தன்னை கண்ட கண்ட இடத்தில் தொட்டு தொந்தரவு தருவதால், இனி பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளாள்.

இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வித்யா மந்திர் பள்ளிக்குச் சென்று நிர்வாகிகளிடம் நடந்த விவரங்களைக் கூறினர்.

 

ஆசிரியர் சதீஸை பள்ளியில் இருந்து வெளியே இழுத்து வந்த அவர்கள், பள்ளிக்கூட வாயில் முன்பு நிற்க வைத்து செருப்பால் அடித்து துவைத்தனர். இரண்டு பெண்களும், சில ஆண்களும் அவரை இழுத்துப்போட்டு சரமாரியாக செருப்புகளாலும், கைகளாலும் தாக்கினர். இதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு என்பதால் இந்த வழக்கை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் சதீஸை போலீசார் கைது செய்தனர்.