Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கேரள போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் சேலம் கொண்டு வரப்பட்டது! தங்கை, மனைவியை பரோலில் எடுக்க தீவிரம்!

கேரளா மாநில
காவல்துறையினரால்
சுட்டுக்கொல்லப்பட்ட
தமிழகத்தைச் சேர்ந்த
மாவோவிய போராளி
மணிவாசகத்தின் சடலம்,
கேரளாவில் இருந்து
ஆம்புலன்ஸ் வாகனம் மூலம்
புதன்கிழமை (நவ. 13) இரவு
சேலம் கொண்டு
வரப்பட்டது.

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே மஞ்சக்கண்டி என்ற வனப்பகுதியில் கடந்த அக். 29ம் தேதி அம்மாநிலத்தின் தண்டர்போல்ட் எனப்படும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறைக்கும், மாவோவிய போராளிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. அந்த மோதலில் மாவோவிய போராளிகள் ஒரு பெண் உள்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் மணிவாசகம் (55), சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர். அவர் கேரளா மாநிலம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோவிய போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்பேரில்தான், கேரளாவின் தனிப்படை காவல்துறையினர் மோதல் கொலையை நிகழ்த்தியுள்ளனர்.

மணிவாசகத்துடன், சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்கிற சீனிவாசன், கார்த்திக், கன்னியாகுமரியைச் சேர்ந்த அஜிதா ஆகியோரும் கொல்லப்பட்டனர். மாவோக்களுடன் நடந்த மோதலின்போதுதான் சுடப்பட்டு அவர்கள் இறந்ததாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து கதை அளந்து வந்தாலும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றே அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

 

”போராளி மணிவாசகத்தின்
தலையின் பின்பக்கத்தில்
தோட்டா துளைக்கப்பட்டு
உள்ளது. மார்பின்
முன்பக்கத்திலும் சில
தோட்டாக்கள் துளைத்துக்கொண்டு
மறுபுறம் வெளியேறி இருக்கின்றன.
இதை வைத்துப் பார்க்கும்போது,
அவரை மிக நெருக்கமாக
பிடித்து வைத்துக்கொண்டுதான்
சுட்டுக்கொன்றிருப்பது
தெரிகிறது. அவருடைய
கால் எலும்புகள் உடைக்கப்பட்டு
உள்ளன. அப்படி இருக்கும்போது
அவர் தப்பிக்க முயன்றார்
என்று கேரளா போலீசார்
கூறுவது நம்பும்படியாக
இல்லை.

கழுத்து, முகம், உடல்
முழுவதும் பல இடங்களில்
காயங்கள் இருக்கின்றன.
இவை எல்லாமே அவரை
திட்டமிட்டுக் கொலை
செய்யப்பட்டதை நிரூபிக்கின்றன.
அக். 29ம் தேதியோ அல்லது
அதற்கு சில நாள்களுக்கு
முன்பே கூட பிடித்து
வைத்துக்கொண்டு சித்ரவதை
செய்திருக்கலாம்.
ஆனால் கேரளா அரசு
இவற்றை எல்லாம் மறைத்து
நாடகமாடுகின்றது.
சுடப்பட்ட போராளிகளின்
உடல்களை முறையாக
பாதுகாக்காமல் வெட்டவெளியில்
மழையிலேயே கிடத்தி
வைத்துள்ளனர்.

ஆரம்பத்தில்,
சடலத்தை அடையாளம்
காட்டக்கூட உறவினர்களை
அனுமதிக்காமல்
அலைக்கழித்தனர்.
கொல்லப்பட்ட பெண் போராளி
அஜிதாவின் சரியான
அடையாளத்தை வெளியிடாமல்,
அவருக்கு பல பெயர்களை
வேண்டுமென்றே மாற்றி மாற்றி
வெளியிட்டனர். கேரள மாநில
காவல்துறையிடம், தமிழர்கள் மீது
இன, மொழி ரீதியான
பாகுபாடு இருப்பதையும்
கண்டுகொண்டோம்,” என்கிறார்
மதுரையைச் சேர்ந்த
மாவோவிய செயற்பாட்டாளர்
தோழர் விவேக்.

 

இது ஒருபுறம் இருக்க,
கொல்லப்பட்ட நால்வரின்
சடலங்களும் உடற்கூறாய்வு
செய்து முடிக்கப்பட்டது.
மணிவாசகத்தின் உடலை
சொந்த ஊரில் அடக்கம்
செய்ய கேரளா நீதிமன்றம்
அனுமதி அளித்தது.
மணிவாசகத்தின் உடலை
அடையாளம் காண்பதற்காக
தீவட்டிப்பட்டியில் வசிக்கும்
அவருடைய தங்கை லட்சுமி
சென்றபோது, சடலத்தை
பார்ப்பதற்கே அனுமதிக்காமல்
கேரளா காவல்துறை
ஆரம்பத்தில் நிறைய
முட்டுக்கட்டைகளை
போட்டுள்ளது.

 

பின்னர் நீதிமன்ற உத்தரவு மூலம் சடலம் அடையாளம் காணப்பட்டது. அதன்பிறகுதான் உடற்கூறாய்வு செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் மணிவாசகத்தின் உடல், சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக, கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13, 2019) இரவு 7.55 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அவருடைய உடல் மீது அரிவாள், சுத்தியல் சின்னத்துடன் கூடிய மாவோவிய செங்கொடி போர்த்தப்பட்டு இருந்தது.

 

இதுகுறித்து முன்கூட்டிய தகவல் அறிந்திருந்த மாவோவிய செயல்பாட்டாளர்களான விவேக், வளர்மதி, சுரேஷ்ராஜன், மாரியப்பன், வெங்கடேஷ், தமயந்தி, ஈஸ்வரி, வின்சென்ட் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். சடலம் பாதுகாப்பாக, பிணவறையில் வைக்கப்பட்டது. பிணவறைக் கிடங்கு முன்பு கூடிய மாவோவிய போராளிகள், மணிவாசகம், சுரேஷ், கார்த்திக், அஜிதா ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டும் செவ்வணக்கம், இன்குலாப் ஜிந்தாபாத் எனக்கூறி முழக்கமிட்டனர்.

மேலும், மாவோயிஸ்டுகள் வர்க்கப் போராளிகளே; தீவிரவாதிகள் அல்ல என்றும், மாவோவிய போராளிகள் நால்வரும் கொல்லப்பட்டதற்கு பினராயி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் எழுதப்பட்ட பதாகைகளையும் தாங்கி வந்திருந்தனர். குறிப்பாக கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., அரசைக் கண்டித்தும், முதல்வர் பினராயி விஜயனைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

 

‘மோதல் படுகொலைகளைக் கண்டிப்போம்’; ‘தியாகிகளின் லட்சியக் கனவை நனவாக்குவோம்’; ‘தோழர் மணிவாசகத்திற்கு வீரவணக்கம் செய்கின்றோம்’; ‘வர்க்கப் போராளி வாத்தியாருக்கு வீரவணக்கம் செய்கின்றோம்’; ‘புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக’ என்று முழக்கமிட்டனர்.

 

மணிவாசகத்தின்
தங்கை சந்திரா,
அவருடைய மனைவி கலா
ஆகியோரும் மாவோவிய
இயக்கங்களில் சேர்ந்து
செயல்பட்டு வந்தனர்.
அவர்கள் இருவரும்
ஏற்கனவே கைது செய்யப்பட்டு,
திருச்சி மத்திய சிறையில்
ஓராண்டுக்கும் மேலாக
அடைக்கப்பட்டு உள்ளனர்.
மணிவாசகத்தின்
இறுதிச்சடங்கில் அவர்களும்
கலந்து கொள்ள,
நீதிமன்றம் ஏற்கனவே
அனுமதி அளித்துள்ளது.

 

அவர்கள் இருவருக்கும்
வியாழக்கிழமை (நவ. 14)
அல்லது வெள்ளிக்கிழமைக்குள்
‘பரோல்’ கிடைத்துவிடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் வந்த பிறகு,
மணிவாசகத்தின் உடல்,
சொந்த ஊரில் அடக்கம்
செய்யப்பட உள்ளது.

 

இதையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஃபைபர் லத்தி மற்றும் தடுப்பு உபகரணங்களுடன் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர்.

 

மாநகர நுண்ணறிவுப்பிரிவு,
மாவட்ட தனிப்பிரிவு,
கியூ பிரிவு, எஸ்பிசிஐடி,
ஐபி என பல்வேறு
உளவுப்பிரிவு
காவல்துறையினரும்
சாதாரண உடையில்
தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டிருந்தனர்.
உளவுப்பிரிவு காவல்துறையினர்
சிலரும், மாவோவிய
செயற்பாட்டாளர்களைப் போல
சிவப்பு நிற உடையணிந்தும்
வந்திருந்தனர். மாவோயிஸ்டுகள்,
காவல்துறையினர், ஊடகத்தினர்
குவிந்ததால் அரசு மருத்துவமனை
வளாகமே பெரும் பரபரப்பாக
காணப்பட்டது.

 

– பேனாக்காரன்