Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!

சேலத்தைச் சேர்ந்த
திமுக பிரமுகரை, 
மாவோயிஸ்ட்களுடன்
தொடர்புடையவராக சித்தரித்து,
உளவுத்துறை மூலம்
மிரட்டிப் பணிய வைக்கும்
மூன்றாம்தர வேலைகளில்
ஆளுங்கட்சி இறங்கி இருப்பது
அரசியல் அரங்கில்
சலசலப்புகளை ஏற்படுத்தி
உள்ளது.

 

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்கு-ழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை (நவ. 12, 2019) மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

விஜயகுமார்

அப்போது திடீரென்று இரண்டு கார்கள் விஜயகுமார் அருகில் வந்து நிற்க, அவற்றில் இருந்து ‘டிப்-டாப்’ ஆக உடையணிந்த நான்கைந்து பேர் இறங்கியிருக்கின்றனர். அவரிடம் ஏதோ ரகசியமாக கிசுகிசுத்தவர்கள், காரில் ஏறும்படி அதட்டலாகவே கூறியுள்ளனர்.

 

மர்ம நபர்கள் வந்ததையும்,
அவர்கள் விஜயகுமாரை
காரில் ஏற்றிச்செல்வதையும்
பார்த்த சிலர், அவர்
கடத்தப்பட்டதாகச் சொல்ல,
விஜயகுமாரின் மனைவி
ஹேமலதா, என்னவோ ஏதோ
என்று ரொம்பவே பதறிப்போனார்.
வந்த கும்பல் யார்?
எதற்காக வந்தார்கள்?
அவருடன் கணவர்
ஏன் சென்றார்? என
அடுத்தடுத்து புதிரான
கேள்விகள் எழவே, இதுபற்றி
உடனடியாக தங்களது
உறவுக்காரர்களுக்கும்,
திமுக பிரமுகர்கள்
சிலருக்கும் தகவல்
அளித்துள்ளார்.

 

அதன்பிறகுதான் அவர்கள் நேராக கிளம்பி அம்மாபேட்டை காவல்நிலையத்தை சூழ்ந்து கொண்டு நியாயம் கேட்டு கூச்சலிட்டனர். நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த காவல்துறை உயரதிகாரிகள் சிலர், ”உங்கள் கணவரை யாரும் கடத்திச்செல்லவில்லை. கியூ பிரிவு காவல்துறையினர்தான் ஏதோ விசாரிக்க வேண்டும் என்று அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் வீடு திரும்பி விடுவார்,” என்றுகூறி, மர்மத் திரையை விலக்கினர். ஆனாலும் எது தொடர்பான விசாரணை என்று அவர்கள் கூறவில்லை. அதன்பிறகே விஜயகுமாரின் மனைவியும், கட்சிக்காரர்கள், உறவினர்களும் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

 

இதற்கிடையே, ‘அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் இன்று மாலை 4.30 மணியளவில் கடத்தப்பட்டார்’ என்ற குறிப்புடன் ஒரு காணொலிக் காட்சி, பேஸ்புக் வழியாக பரவத் தொடங்கியது.

மாவோயிஸ்ட் மணிவாசகம்

இது ஒருபுறம் இருக்க, அண்மையில் கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் போராளி மணிவாசகத்தின் செல்போனில் விஜயகுமாரின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவரிடம் சந்தேகத்தின்பேரில் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும், ஊடகங்களுக்கு ஒரு தகவல் திட்டமிட்டே காவல்துறை தரப்பிலிருந்து கசிய விடப்பட்டது.

 

அவ்வாறு கசிந்த தகவல் சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, நாம் கியூ பிரிவு ஆய்வாளர் கோகிலாவை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவரோ, ”செல்போன் நம்பர்கள் எல்லாம் வைத்து ஆய்வு செய்து வருகிறோம். மாவோயிஸம் தொடர்பாகத்தான் விசாரிக்கிறோம். விஜயகுமாரிடம் விசாரணை முடிந்த பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பி விடுவோம்,” என்று பட்டும் படாமலும் சொன்னார்.

 

இதற்கிடையே, இரவு 10 மணியளவில் விஜயகுமார், எப்படி சென்றாரோ அப்படியே வீடு திரும்பினார். அவரைப் பார்த்த பிறகுதான் குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

நடந்த சம்பவம் குறித்து, நள்ளிரவு கடந்து 1.05 மணியளவில் விஜயகுமாரிடமும் பேசினோம். கியூ பிரிவின் சூழ்ச்சி, ஆளுங்கட்சியின் உள்நோக்கம் பற்றியெல்லாம் அறிந்து கொந்தளித்தார். அவர் நம்மிடம்…

 

”எங்கள் வீடு அருகில்தான் நோட்ரி டேம் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப்பள்ளிக்கு தட வழிக்காக இடம் தேவைப்படுவது குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகம் சொல்லி இருந்தது. அதனால், பள்ளிக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தேன். அப்போது மாலை 5 மணி இருக்கும். திடீரென்று இரண்டு கார்களில் சிலர் வந்திறங்கினர். அப்போது அவர்கள் எல்லாம் யாரென்றே எனக்குத் தெரியாது. கார்களும் காவல்துறைக்குச் சம்பந்தமானது இல்லை. காலையில் இருந்தே அவர்கள் என்னை, நான் எங்கே செல்கிறேன்… என்ன செய்கிறேன் என்பதை எல்லாம் ரகசியமாக கண்காணித்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது.

 

ஏதோ விசாரிக்க வேண்டும்
என்று கூறிவிட்டு என்னை
காரில் ஏற்றிக்கொண்டு
சென்றனர். காருக்குள்
உட்கார்ந்ததும் என்னிடம்,
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு
எதிராக மக்களை திரட்டிக்கொண்டு
நாளைக்கு (அதாவது, நவ. 13ம் தேதி,
புதன்கிழமை) நீங்கள் சென்னைக்கு
போகிறீர்களா? என்று கேட்டனர்.
அப்படி எல்லாம் இல்லை
என்று கூறினேன். ஆனாலும்
விடாமல் எட்டுவழிச்சாலைத்
திட்டம் தொடர்பாகவே என்னிடம்
சுற்றிச்சுற்றி விசாரித்தனர்.

 

இந்த விசாரணை
முடியும்வரை அவர்கள்
காரை எந்த இடத்திலும்
நிறுத்தவில்லை.
கடைசியாக அவர்கள்
ஆத்தூரில் உள்ள ஒரு
ஹோட்டலில்தான் காரை
நிறுத்தினர். விசாரணை
முடிந்து, இரவு 10 மணிக்கு
வீட்டுக்கு வந்துவிட்டேன்.

 

எட்டுவழிச்சாலைக்கு நிலம்
கொடுத்தால் அதிக இழப்பீடு
கொடுப்போம் என்று அரசு
கூறி வருகிறது. ஏற்கனவே
நான்கு வழிச்சாலைக்கு நிலம்
கையகப்படுத்தியதில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும்
இழப்பீடு தொகை முழுமையாக
கொடுக்கப்படவில்லை.
அதனால்தான் மக்களுக்கு ஆளுங்கட்சி
மீது நம்பிக்கை ஏற்படவில்லை.
எத்தனை கோடி ரூபாய்
கொடுத்தாலும் எட்டுவழிச்சாலைக்கு
நிலம் கொடுக்க மக்கள்
தயாராக இல்லை.

 

நான் அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியத்தில் மூன்று முறை
தலைவராக இருந்திருக்கிறேன்.
கடைசியாக நடந்த மக்களவை
தேர்தலில்கூட, மாநில அளவில்
அயோத்தியாப்பட்டணம்
ஒன்றியத்தில்தான் திமுகவுக்கு
40 ஆயிரம் வாக்குகள்
அதிகமாக பெற்றுக்
கொடுத்திருக்கிறேன்.
அதனால் உள்ளாட்சித்
தேர்தலின்போது ஆளுங்கட்சிக்கு
என்னால் கடும் நெருக்கடி
ஏற்படும் என்று நினைக்கின்றனர்.
அதற்காகத்தான், என்னை
எப்படியாவது எதிலாவது
சிக்க வைத்துவிட வேண்டும்
என்று இப்படி கியூ பிராஞ்ச்
போலீசாரை வைத்து
ஆளுங்கட்சியினர் மிரட்டிப்
பார்க்கின்றனர்.

 

ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு காவல்துறை துணை போகிறது. காவல்துறையினர் காரில் என் இடத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக என் மீது கியூ பிரிவு காவல்துறையினர் அவதூறு பரப்புகின்றனர். விசாரணை முடியும்வரை என்னுடைய இரண்டு செல்போன்களும் போலீசாரிடம்தான் இருந்தன. என்னை சிக்க வைப்பதற்காக போலீசாரே என் செல்போனில் ஏதாவது பதிவு செய்திருப்பார்களோ என்று சந்தேகம் உள்ளது,” என்றார் விஜயகுமார்.

 

விசாரணை முடிந்த பிறகு, விஜயகுமாரிடம் ஒரு ஸ்டேட்மென்ட்டில், கையெழுத்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் கியூ பிரிவு காவல்துறையினர். கையெழுத்துப் போடும்முன் எழுதப்பட்ட ஸ்டேட்மெண்ட் வாசித்துப் பார்த்ததாகவும் கூறினார் விஜயகுமார்.

 

எட்டுவழிச்சாலை
எதிர்ப்பு இயக்கத்தினர்,
முதல்வர் எடப்பாடி
பழனிசாமிக்கு எதிராக
அதிர்ச்சி அளிக்கும்
ஆதாரங்களை இன்று
(நவ. 13) காலை 11 மணிக்கு,
சென்னை பத்திரிகையாளர்கள்
அரங்கத்தில் வெளியிடுவதாக
வாட்ஸ்அப் குழுக்களில்
உலாவ விட்டுள்ளனர்.
அதையொட்டியே, விஜயகுமாரிடம்
கியூ பிரிவு காவல்துறையினர்
விசாரணை நடத்தி இருப்பதும்
தெரிய வந்துள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் முன்பே, எதிர்க்கட்சிகளில் கடும் சவால் அளிக்கக் கூடியவர்களை தேடிப்பிடித்து சாம, பேத, தான, தண்ட உபாயங்கள் மூலம் அசைத்துப் பார்க்க தொடங்கியிருக்கிறது ஆளுங்கட்சி.

 

– பேனாக்காரன்