Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

“நிஜ வாழ்க்கையில் நடிக்கிறேனா?” – ரஜினிகாந்த் பதில்

‘காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிப்பது கிடையாது’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நாளை (அக். 27, 2017) நடைபெறுகிறது. இதற்காக ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக, இன்று (அக்.26, 2017) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த், எமி ஜாக்சன், ஷங்கர், அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் பதில் அளித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே நடந்த இந்த சந்திப்பில், ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தார் ரஜினி.

‘பொது வாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே..?’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, “நான் சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை. நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசு தராததால் நான் நடிக்கவில்லை. இதே தோற்றத்தில் சினிமாவில் நடித்தால் யாரும் ரசிக்க மாட்டார்கள்” என்று வேடிக்கையாக பதில் அளித்தார்.

“இந்தப் படம் ஹாலிவுட் படம் போல இருக்கும். ஆனால், எந்தப் படத்தில் இருந்தும் காப்பி அடிக்கவில்லை. அறிவியல், சமூகம் சார்ந்த கற்பனைக்கதை தான் இந்தப் படம். இது தமிழ்ப் படம் கிடையாது, இந்தியப் படம். ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், புதிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. 3டி படங்களை ஊக்கப்படுத்தும் வகையில் ‘2.0’ தயாராகியிருக்கிறது” என்றார் ஷங்கர்.

“இந்தப் படத்தில் நான் வில்லன் என்று சொல்ல முடியாது. நிறைய கேரக்டர்களைப் பிரதிபலிக்கும் வகையில் என்னுடைய கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் ரிகர்சல் பார்க்கவில்லை. ஷங்கர் என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்தேன்” என்றார் பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார்.

படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், “படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்கள் நாளை வெளியிடப்படும். இன்னொரு பாடல் பின்னர் வெளியிடப்படும். இவை இல்லாமல் படத்தின் தீம் கலந்து சின்னச் சின்ன பாடல்கள் நிறைய இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்