Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி

தம்புல்லா: இலங்கை தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியது. ஷிகர் தவான் அபாரமாக ஆடி 132 ரன்களை குவித்தார். கோஹ்லி அரைசதம் அடித்தார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து, இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் . இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இலங்கை அணி 18.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டிக்வெல்லா 65 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது டிக்வெல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

டிக்வெல்லா அவுட்டான சிறிது நேரத்தில் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் க்ளீன் போல்டானார். இலங்கை அணி 27.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அந்த அணி 43.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 216 ரன்னில் சுருண்டது. கடைசி 66 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது இலங்கை. இது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அக்சார் படேல்: இந்திய அணி சார்பில் அக்சார் பட்டேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், கேதர் ஜாதவ், சாஹல் மற்றும் பும்ப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

அடுத்து, 217 என்ற எளிதான இலக்கோடு இந்தியா களம் இறங்கியது. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ரோஹித் ஷர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோஹ்லி, தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

அபாரமாக ஆடிய ஷிகர் தவான், 132 ரன்கள் எடுத்தார். விராட் கோஹ்லி 82 ரன்களை சேர்த்தார். 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை, இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா, 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஆட்டம், வரும் 24-ம் தேதி பல்லேகேலேயில் நடக்கிறது.