தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகத்திற்கு இணையாக, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், டெங்கு மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசு தரப்போ, டெங்கு மரணங்களை ஒட்டுமொத்தமாக மறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறது.
எப்படி பரவுகிறது?:
‘ஏடிஸ்’ என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு வைரஸ் உடலில் நுழைவதால், டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதில் டெங்கு 1, 2, 3, 4 என்று நான்கு வகைகள் உள்ளன. 3 மற்றும் 4ம் வகை டெங்கு காய்ச்சல் கொடூரமானது என்கிறது மருத்துவத்துறை. ஏடிஸ் வகை கொசுக்கள் பகலில் கடிக்கக் கூடியது. தேங்கியுள்ள சுத்தமான நீர் ஆதாரங்களில் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.
மரணத்தை ஏற்படுத்தும்:
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் உடல் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்கள் (பிளேட்டிலெட்) எண்ணிக்கை வேகமாக குறையும். சராசரியாக ஒருவரது ரத்தத்தில் 1.50 லட்சத்திற்கும் மேல் தட்டை அணுக்கள் இருக்கும். அவை 1 லட்சத்திற்கும் கீழே குறையும்போது மரணம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். தட்டை அணுக்கள் குறையக் குறைய, ரத்தம் உறையாமை பிரச்னை ஏற்படுகிறது. இதனால் உடலின் உள்ளுறுப்புகளில் தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது.
டெங்கு பரவும் இதே காலக்கட்டத்தில் பரவலாக சிக்குன்குன்யா காய்ச்சலும் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதன் விவரங்களை தமிழக அரசு திட்டமிட்டு மறைப்பதாகவும் சொல்கின்றனர்.
இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும், பொதுச்சுகாதாரச் சங்கத் தலைவருமான மருத்துவர் இளங்கோவிடம் (படம்) பேசினோம்.
![](https://i1.wp.com/puthiyaagarathi.com/wp-content/uploads/2017/08/20170819_130238-1.jpg?resize=201%2C288)
”டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால்கூட, பொது சுகாதாரத்துறை கொடுக்க மறுக்கிறது. இன்னும் முழுமையாக தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்கிறார்கள்.
எங்களுக்கு கிடைத்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை 250 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் 15 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள்.
தமிழ்நாடு அரசோ இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் மட்டும்தான் இறந்துள்ளதாகக் கூறி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது. பழனியில்தான் முதலில் டெங்கு பரவியது. அங்கு மட்டுமே இதுவரை 21 பேர் இறந்துள்ளனர்.
டெங்குவால் இறந்தவர்களைக்கூட, கிட்னி பாதிப்பு போன்ற வேறு உடல்நலக் கோளாறால் இறந்ததாகச் சொல்கின்றனர். எனில், கிட்னி பாதிப்பிற்கெல்லாம் சிகிச்சை அளிக்கும் வசதி இருக்கிறதா இல்லையா என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். டெங்கு வந்தால் மாரடைப்பும் வரும். அதற்காக மாரடைப்பால்தான் இறந்தார் என்று சொல்லலாமா? அதற்கு முதன்மைக் காரணி டெங்குதான் என்பதை ஏன் மறைக்க வேண்டும்?
டெங்கு காய்ச்சலால் இறந்தார் என்ற தகவலை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தனியார் மருத்துவமனைகளை அரசு மிரட்டி வைத்துள்ளது. இப்படி தகவல்களை மறைப்பதால், அரசு தற்காலிகமாக பூரிப்படையலாமே தவிர, யாருக்கும் நன்மைகள் கிடைத்து விடாது.
தமிழ்நாட்டில் பொது சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.
நிலவேம்பு குடிநீர் குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமடையும் என்பதற்கு இதுவரை போதிய ஆதாரங்கள் இல்லை. அரசே, நிலவேம்பு குடிநீர் வழங்குகிறது எனில், அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை,” என்கிறார் மருத்துவர் இளங்கோ.
தடுப்பு நடவடிக்கைகள்:
டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள், தேங்கியிருக்கும் சுத்தமான நீரில்தான் உற்பத்தி ஆகின்றன. அதனால் நம் வீடு, சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடர் நிறங்களைத் தேடிச் செல்லக்கூடியது ஏடிஸ் கொசுக்கள். அதனால் வெளிர் நிற ஆடைகளை உடுத்துவது நலம். குழந்தைகள், வயதானவர்கள் உடல் முழுக்க மூடியிருக்கும் வகையில் உடைகளை அணிவதும் நலம் பயக்கும்.
டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அதனால் சாதாரண காய்ச்சல்தானே என்று மருந்து கடைகளில், மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது நல்லது.
பப்பாளி இலைச்சாறு கஷாயம் குடித்தால் ரத்தத்தில் தட்டை அணுக்கள் பெருகுவதாக தெரியவந்துள்ளது. அந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.