Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

(தகவல்)

 

‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பதுதான் அவ்வை வாக்கு. பொருளாதார நெருக்கடிகள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கல்வி நிலையங்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.

 

அது என்ன திட்டம்?

பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.

 

தகுதிகள் என்னென்ன?:

 

1. பிளஸ்-2வில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

 

2. பிளஸ்-2வை பள்ளியில் சேர்ந்து பயின்றிருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலமோ படித்திருக்கக் கூடாது.

 

3. பல்கலைக்கழக மானியக்குழு எனப்படும் யுஜிசி அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலையில் தற்போது முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

 

4. தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் படிப்பவர்கள் இதில் பயன்பெற முடியாது. பட்டயப் படிப்பு (டிப்ளமோ) படிப்பவர்களுக்கும் இந்த உதவித்தொகை பொருந்தாது.

 

எவ்வளவு பேருக்கு உதவித்தொகை?:

 

இந்தியா முழுவதும்
மொத்தம் 82 ஆயிரம்
மாணவர்களுக்கு இந்த
உதவித்தொகை கிடைக்கும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு
ஏற்ப ஒவ்வொரு
மாநிலத்திற்கும்
உதவித்தொகை பகிர்ந்து
அளிக்கப்படும். மொத்த
பயனாளிகளில்
50 சதவீதம் பேர்
மாணவிகள் என்பது
சிறப்பு அம்சம்.
தமிழ்நாட்டில் 4883
பேருக்கும், புதுச்சேரியில்
78 பேருக்கும் இந்த
உதவித்தொகை
வழங்கப்படும்.

 

ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பயனாளியின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும்.

 

எப்படி விண்ணப்பிப்பது?:

 

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று, ஆதார் எண், மாணவரின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். ஏனெனில் உதவித்தொகை, பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

 

புதுப்பித்தல் அவசியம்:

 

கடந்த ஆண்டு
உதவித்தொகை பெற்ற
மாணவர்கள், நடப்பு
ஆண்டுக்கு பெற,
பதிவை புதுப்பிக்க
வேண்டும். அதேபோல்,
கடந்த ஆண்டு நடந்த
பட்டப்படிப்பு தேர்வில்
குறைந்தபட்சம் 60 சதவீத
மதிப்பெண்கள்
பெற்றிருத்தல் வேண்டும்.
75 சதவீத வருகைப்பதிவும்
அவசியம்.

 

கூடுதல் விவரங்களுக்கு:

 

National Scholarship Division,
Ministry of Human Resource Department,
Department of Higher Education,
West Block 1, 2nd Floor,
Wing 6, Room No. 6,
R.K.Puram, Sector 1,
New Delhi – 110066.

 

தொடர்புக்கு: 011 – 26172917, 26172491, 26165238.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2019

 

மேலும் விவரங்களை www.scholarships.gov.in என்ற வலைத்தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

 

– செங்கழுநீர்