Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.

 

சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில்,
1956ம் ஆண்டு முதல்
சேலம் பட்டு கைத்தறி
நெசவாளர்கள் கூட்டுறவு
சங்கம் செயல்பட்டு வருகிறது.

 

இக்கூட்டுறவு சங்கத்தில்
1558 கைத்தறி நெசவாளர்கள்
உறுப்பினர்களாக உள்ளனர்.
நெசவாளர்கள் உற்பத்தி செய்யும்
வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி,
அங்கவஸ்திரம் ஆகியவற்றை
சங்கம் நேரடியாக கொள்முதல்
செய்து விற்பனை செய்கிறது.

 

இதற்காக சங்க
உறுப்பினர்களுக்கு
மாதத்திற்கு ஒரு பாவு,
அதற்குரிய கோரா பட்டு நூல்
ஆகியவற்றை வழங்குகிறது.
ஒரு பாவு மூலம் பத்து
வெண்பட்டு வேஷ்டிகளை
உற்பத்தி செய்ய முடியும்.
ஒரு வேஷ்டியின் கொள்முதல்
விலை 750 ரூபாய்.

 

ஒரு குடும்பமே
நாள்தோறும் 12 மணி நேரம்
வேலை செய்தால்தான்
மாதத்திற்கு அதிகபட்சமாக
7500 ரூபாய் வருவாய்
ஈட்ட முடியும். அதனால்
கைத்தறி நெசவாளர்களின்
நலன் கருதி தமிழக அரசு,
வெண்பட்டு துணிகளுக்கு
நேரடியாக 20% முதல் 30%
வரை மானியம் வழங்குகிறது.

 

மேலும், வாடிக்கையாளர்களுக்கு
கூட்டுறவு சங்கம் நிலையாக
10 சதவீதமும், சிறப்பு
தள்ளுபடியாக 10 சதவீதமும்
வழங்க வேண்டும் என்று
கூட்டுறவு சங்க விதிகளில்
கூறப்பட்டுள்ளது. ஆனால்,
சங்க ஊழியர்கள் சிறப்பு
தள்ளுபடியில் 5 சதவீதம்
மட்டுமே வழங்கிவிட்டு,
10 சதவீதம் வழங்கியதாக
நூதனமுறையில் மோசடியில்
ஈடுபட்டு வந்துள்ளனர்.
உண்மையில் இந்த லாபம்
என்பது, கைத்தறி
நெசவாளர்களுக்கும்,
வாடிக்கையாளர்களுக்கும்
கிடைக்க வேண்டியதாகும்.

 

தேவராஜ் – நரேந்திர சேகர்

இது தொடர்பாக
சேலம் பட்டு கைத்தறி
நெசவாளர் கூட்டுறவு
சங்கத்தின் நீண்ட கால
உறுப்பினரான தேவராஜ்,
நிர்வாகக்குழு இயக்குநர்களுள்
ஒருவரான நரேந்திரசேகர்
ஆகியோர் நம்மிடம் பேசினர்.

 

”இந்தியாவிலேயே
வெண்பட்டினால் ஆன வேஷ்டி,
துண்டு, சட்டைத்துணிகளை
கைத்தறியில் உற்பத்தி செய்யும்
ஒரே இடம் சேலம்
அம்மாபேட்டைதான்.
சவுராஷ்டிரா சமூகத்தினர்
மட்டும்தான் இந்த தொழிலில்
இருக்கிறார்கள். வெண்பட்டு
உற்பத்திக்கென புவிசார்
குறியீடும் உள்ளது.

 

கைத்தறி நெசவாளர்களின்
வாழ்க்கைத்தரத்தை
பாதுகாக்கத்தான் சேலம்
பட்டு கைத்தறி நெசவாளர்கள்
கூட்டுறவு சங்கம்
தொடங்கப்பட்டது. ஆனால்,
கடந்த சில ஆண்டுகளாகவே
இந்த சங்கத்தில் உள்ள
மேலாளர் ரவிச்சந்திரன்,
அதிமுக நிர்வாகக்குழுத் தலைவர்,
துணைத்தலைவர் ஆகியோரை
கைக்குள் போட்டுக்கொண்டு
பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டு வருகிறார்.

 

 

கடந்த ஆண்டு
1.10 கோடி ரூபாய்க்கு மேல்
சரக்கு இருப்பில் மோசடி
நடந்தது குறித்து ‘நக்கீரன்’
பத்திரிகையிலும், ‘புதிய அகராதி’
இணையதளத்திலும் செய்திகள்
வெளியானது. அதன்பிறகுதான்
மோசடி செய்த ஊழியர்களிடம்
இருந்து அத்தொகை முழுமையாக
வசூலிக்கப்பட்டது.

 

இந்நிலையில்,
சங்க மேலாளர் ரவிச்சந்திரன்,
வேறு சில முறைகேட்டிலும்
ஈடுபட்டுள்ளது இப்போது
தெரிய வந்துள்ளது. அதாவது,
வாடிக்கையாளர்கள் வாங்கும்
ஒவ்வொரு உருப்படிக்கும்
சங்கம் நிலையாக 10 சதவீதம்
தள்ளுபடியும், சிறப்புத்
தள்ளுபடியாக 10 சதவீதமும்
வழங்க வேண்டும். ஆனால்,
சிறப்புத் தள்ளுபடியில்
5 சதவீதம் மட்டுமே வழங்கி
இன்வாய்ஸ் கொடுக்கிறார்கள்.

 

பிறகு ஒரிஜினல் ரசீது பதிவேட்டில், எல்லா வாடிக்கையாளர்களுக்கும் 10 + 10 என மொத்தம் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டதாக போலியான விவரங்களை பதிவு செய்து கொள்கிறார்கள்.

 

அதோடு, நெசவாளர்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்டுவதற்காக அரசு ஒவ்வொரு உருப்படிக்கும் 200 அல்லது 300 ரூபாய் தள்ளுபடி (ரிபேட்) வழங்குகிறது. அதிலும் முறைகேடு செய்துள்ளனர். இப்படி 5 சதவீதம் தள்ளுபடி முறைகேட்டின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை சுருட்டி உள்ளனர்.

 

அடுத்து, சங்க விதிகளின்படி மாஸ்டர் வீவர் எனப்படும் பெரிய தறி முதலாளிகளிடம் வெண்பட்டு உற்பத்திகளை கொள்முதல் செய்யக்கூடாது. ஆனால் சங்க மேலாளர் ரவிச்சந்திரன், மாஸ்டர் வீவர்களிடம் வெண்பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், சட்டைத்துணிகளை கொள்முதல் செய்து, அதில் சங்கத்தின் லேபிள்களை ஒட்டி வியாபாரம் செய்கிறார்.

 

இதனால், ஓரிரு தறி மட்டும் வைத்துக்கொண்டு பிழைப்பு -நடத்தும் 1000 நெசவாளர்களின் உருப்படிகள் விற்க முடியாமல் தேக்கம் அடைகின்றன. தற்போது 3 கோடி ரூபாய்க்கு மேல் சரக்குகள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன. சரக்கு தேக்கத்தால் சங்கத்திற்குக் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்படுகிறது. அதன்மூலம் நெசவாளர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபமும் கிடைக்காமல் போகிறது.

 

நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பாவு, பியூர் ஜரிகை, கோரா நூல் ஆகியவை டான்சில்க் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு டான்சில்க் வழங்கும் கமிஷன், பாவு மற்றும் கோராவில் எடை மோசடி ஆகியவற்றில் மட்டும் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய்கின்றனர். மோசடிகளை கண்டுகொள்ளாமல் இருக்க சங்க மேலாளர் ரவிச்சந்திரன், நிர்வாகக்குழுத் தலைவர் உள்ளிட்ட இயக்குநர்கள், நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு மாதந்தோறும் கையூட்டு வழங்கி விடுகிறார்.

 

இந்த மோசடிகள் குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, கைத்தறி துணிநூல் துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோருக்கும் புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,” என்றனர்.

 

இந்தப் புகார்கள் குறித்து விளக்கம் கேட்பதற்காக நிர்வாக இயக்குநர் சையது தாவூதை அணுகினோம். அவரோ, ”நான் இன்னும் சில நாளில் விஆர்எஸ்-ல் செல்ல இருக்கிறேன். இப்போதைக்கு இந்த விவகாரத்தை பத்தி எதுவும் எழுத வேணாம் சார்…,” என்று கூறி கும்பிடு போட்டார்.

 

இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான சங்க மேலாளர் ரவிச்சந்திரனிடம் புகார்களை முன்வைத்தோம்.

ரவிச்சந்திரன், மேலாளர்

”இந்த கூட்டுறவு சங்கத்திற்கு
எதிராக பெட்டிஷன்
அனுப்புறதுதான் தேவராஜிக்கு
ஒரே வேலை. அவரால்
எனக்கு பிரஷ்ஷர், சுகர்
ஏறிவிட்டது. எனக்கு
ஏதாவது ஆச்சுனா
அவர்தான் பொறுப்பு.

 

கூட்டுறவு சங்கம் என்றால்
சில நெளிவு சுளிவுகளும்,
அட்ஜஸ்ட்மெண்டுகளும்
இருக்கத்தான் செய்யும்.
அதிகாரிகள், அமைச்சர்கள்,
எம்எல்ஏக்கள் ஆய்வுக்கு
வந்து செல்கிறார்கள்.
அவர்களுக்கு ‘மரியாதை’
செய்ய வேண்டும் என்றால்
எங்கிருந்து எடுத்துக் கொடுப்பது?
எல்லா கூட்டுறவு சங்கத்திலும்
இதெல்லாம் சகஜமாக
நடப்பதுதான் சார்.

 

தேவராஜ், எதையோ
எதிர்பார்த்து, மிரட்டும்
நோக்கில் புகார் மனுக்களை
அளித்துள்ளார். பழைய
உருப்படிகள் லேசாக
பழுப்பு ஏறிவிடும்.
அதனால் வாடிக்கையாளர்கள்
வாங்க மறுப்பதால்,
தேக்கம் அடைந்துள்ளன.
இப்படியே புகார் சொல்லிக்
கொண்டிருந்தால்
நெசவாளர்கள்தான்
பாதிக்கப்படுவார்கள்,” என்றார்
மேலாளர் ரவிச்சந்திரன்.

ஸ்ரீனிவாசன், திமுக பிரமுகர்

இது ஒருபுறம் இருக்க,
சங்க மேலாளரிடம் விளக்கம்
பெறுவதற்காக நாம்
சென்றிருந்தபோது தகவல்
அறிந்து அங்கு வந்த
திமுக நெசவாளர் அணி
நிர்வாகி சீனி என்கிற சீனிவாசன்,
புகார்தாரர் பற்றி தனிப்பட்ட
முறையில் விமர்சித்தார்.
ஒருகட்டத்தில், நம்மை
மிரட்டும் தொனியில்,
‘இதைப்பற்றி நானும் திமுக
எம்எல்ஏ ராஜேந்திரன்
அண்ணனிடம் பேசிவிட்டேன்.
சரி.. பாத்துக்கலாம்னு
சொல்லிட்டார்.
நீங்க போங்க…,’ என
மிரட்டலாகச் சொன்னார்.

ஆனந்தன், துணை இயக்குநர்

இச்சங்கத்தின் மீதான
முறைகேடு புகார்கள் குறித்து
சேலம் மண்டல கைத்தறி
துணிநூல் துறை துணை
இயக்குநர் ஆனந்தனிடம்
கேட்டபோது, ”எனக்கு 35 வருஷம்
அனுபவம் இருக்கு.
எனக்குத் தெரிஞ்சு அந்த
சங்கத்தில் தப்பு நடக்க
வாய்ப்பு இல்ல. ஒருத்தரு,
பெட்டிஷன் போடுவதையே
முழுநேர பணியாக வைத்திருக்கிறார்.
அவர் காசு கேட்டு மிரட்டுறார்.
இல்லாவிட்டால் ஊடகத்திடம்
சொல்லிடுறார். நாங்க
யாரிடம் சொல்வது? நான்
3 மாவட்டங்களில் உள்ள
கூட்டுறவு சங்கங்களை
பார்க்கணும். இந்த புகார்
குறித்துதெல்லாம் பார்க்க
நேரமில்லை. இருந்தாலும்,
நீங்கள் சொன்ன தவறுகளை
களைஞ்சிருவோம் சார்…,”
என்றார்.

 

சங்க மேலாளர்
ரவிச்சந்திரனிடம் முதல்முறை
விசாரித்துவிட்டு வந்த
அன்று இரவே, திமுக
நெசவாளர் அணி நிர்வாகி
சீனிவாசன் நம்மை
தொடர்பு கொண்டு,
சங்கத்தில் எதற்காக
விசாரித்தீர்கள்? என
சம்பந்தமே இல்லாமல்
மூக்கை நுழைத்தார்.
மற்றொரு திமுக பிரமுகர்
பி.வி.பிரகாஷ் என்பவரும்
மேலாளருக்கு சப்போர்ட்
செய்து பேசினார்.

 

ஒரு வார இடைவெளியில்
இரண்டாம் முறையாக நேரில்
விசாரித்துவிட்டு வந்தபோதும்,
லோட்டஸ் டிவி சானல்
செய்தியாளர் என்ற அறிமுகத்துடன்,
கேபிள் டிவி நடத்தும் உத்தரவேல்
என்பவரின் மகன் வினோத்
பேசினார். அவர், ”யார்
புகார் கொடுத்தது? எதற்காக
ரவிச்சந்திரனிடம் விசாரித்தீர்கள்?
அவர் உங்களிடம் பேசும்படி
சொன்னார். உங்களுக்கு
என்ன வேண்டுமோ,
அதை கேட்டால் செய்து
கொடுக்க தயார்,” என்றார்.
நாம் பிடி கொடுக்காமல்
போகவே, ”ரிப்போர்ட்டர்கள்
தப்பு செய்ய ரொம்ப
நேரம் ஆகாது. பார்த்துக்குங்க.
நானும் ஊடகத்தில்தான்
இருக்கிறேன்,” என ‘நாகரீகமாக’
மிரட்டிவிட்டு பேச்சைத்
துண்டித்தார்.

 

முறைகேடு நடக்கவில்லை என்பவர்கள், எதற்காக பலர் மூலம் நம்மிடம் பேச வேண்டும்? நெளிவு சுளிவு, அட்ஜஸ்ட்மெண்ட் என்ற சொற்கள் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளதை மேலாளர் மூலாம் பூச்சுடன் சொன்னார்.

 

ஊரடங்கு காலத்தில் ஒரு நேர வயிற்றுப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களின் வயிற்றில் அடித்திருக்கிறது சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.

 

சேலம் சங்கம் மட்டுமின்றி,
தமிழகம் முழுவதும் அனைத்து
நெசவாளர் கூட்டுறவு
சங்கங்களிலும் உயரதிகாரிகள்
ஆவணங்களை முழுமையாக
ஆய்வு செய்யும்பட்சத்தில்,
மிகப்பெரிய அளவிலான
மோசடி பூதம் வெளியாகலாம்
என்கிறார்கள் நெசவாளர்கள்.

 

– பேனாக்காரன்