Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நடிகர் ‘அல்வா’ வாசு கவலைக்கிடம்

தமிழின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான அல்வா வாசு உடல்நலம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் அல்வா வாசு. அமைதிப்படை, சிவாஜி, கருப்பசாமி குத்தகைதாரர், எல்லாம் அவன் செயல் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக, நடிகர் வடிவேலுவின் காமெடி கூட்டணியில் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் பெரிய அளவில் அல்வா வாசுவை கொண்டுபோய் சேர்த்தன.

கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சையில் இருந்து வந்த அவர், படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடித்த சில படங்களிலும் உடல் அளவில் மெலிந்து காணப்பட்டார்.

கல்லீரல் பிரச்னைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அவர் இனி உடல்நலம் தேறுவது கடினம் என்றுகூறி கைவிரித்து விட்டனர்.

இது தொடர்பாக அல்வா வாசுவின் மைத்துனர் சுந்தரை நாம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நலம் மோசமடைந்துள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உடல்திறன் இல்லை என்று கூறிவிட்டனர். அவருக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்,” என்றார்.

அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.

‘அல்வா’ ஏன்?: அமைதிப்படை படத்தில், தாயம்மா பாத்திரத்தில் நடித்த கஸ்தூரிக்கு, சத்யராஜ் அல்வாவில் கஞ்சா கலந்து கொடுத்து, மயக்கி, பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற ஒரு காட்சி இடம்பெறும். அந்த காட்சியில் சத்யராஜூக்கு அல்வா வாங்கி வந்து கொடுக்கும் பாத்திரத்தில் வாசு நடித்திருப்பார். இதன்பிறகே, சாதாரண வாசுவாக இருந்த அவர், ‘அல்வா’ வாசு என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.