Sunday, May 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு, வரும் மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம்
ஓமலூரைச் சேர்ந்த
வெங்கடாசலம் – சித்ரா தம்பதியின்
மகன் கோகுல்ராஜ் (23).
பொறியியல் பட்டதாரி.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இவர், நாமக்கல்லைச் சேர்ந்த,
தன்னுடன் படித்து வந்த கொங்கு
வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த
சுவாதி என்பவருடன் நெருங்கிப்
பழகி வந்தார்.

 

கடந்த 2015ம் ஆண்டு,
ஜூன் 23ம் தேதி, வீட்டில் இருந்து
கல்லூரிக்குச் சென்று வருவதாகக்
கூறிவிட்டுச் சென்றவர் அதன்பின்
வீடு திரும்பவில்லை.

 

மறுநாள் மாலையில்,
நாமக்கல் மாவட்டம்
கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில்
ரயில் தண்டவாளத்தில் தலை
துண்டிக்கப்பட்ட நிலையில்
கோகுல்ராஜின் சடலம்
கண்டெடுக்கப்பட்டது.

 

கோகுல்ராஜ், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த
பெண்ணுடன் நெருங்கிப்
பழகி வந்ததை அறிந்த, சேலம்
மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த
தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை
நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட
17 பேர் கூட்டு சேர்ந்து, அவரை
ஆணவப்படுகொலை செய்ததாக
வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கின் விசாரணை
ஆரம்பத்தில் நாமக்கல் மாவட்ட
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்
நடந்து வந்தது. அதன் பின்னர்,
கோகுல்ராஜ் தரப்பில் கேட்டுக்
கொண்டதற்கிணங்க வழக்கின்
தொடர் விசாரணை மதுரை
மாவட்ட வன்கொடுமை தடுப்பு
சிறப்பு நீதிமன்றத்திற்கு
மாற்றப்பட்டது.

 

கோகுல்ராஜ் தரப்பில்
வழக்கறிஞர் பவானி பா.மோகன்,
யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில்
மதுரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண
லட்சுமணராஜூ ஆஜராகி வாதாடினர்.

 

இரு தரப்பிலும் சாட்சிகள்
விசாரணை நிறைவு அடைந்தன.
இந்நிலையில், பிப். 9, 2022ம் தேதி
மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு
விசாரணைக்கு வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட
அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத்குமார்,
இந்த வழக்கின் தீர்ப்பை வரும்
மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி
வைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply