Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சேலம் அருகே,
இரண்டு மலைகளுக்கு
இடையே பள்ளத்தாக்கு பகுதியில்
இருந்த சூரியூர் பள்ளக்காடு
கிராமம் வருவாய்த்துறை
ஆவணங்களில் இருந்து
திடீரென்று தொலைந்து
போனதாக சொல்லப்பட,
28 ஆண்டுகளுக்கும் மேலாக
கிராமத்தைத் தேடும் பணிகளில்
வனக்கிராம மக்கள் சட்டப்
போராட்டம் நடத்தி
வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டது சூரியூர் பள்ளக்காடு எனும் வனக்கிராமம். ஜல்லுத்துமலை, ஜருகுமலை ஆகிய இரு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த வனக்கிராமத்தில் 77 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருவதுடன், மலையடிவாரத்தில் மலர், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களும் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறும்படியும் வனத்துறையினர் கூறினர்.

 

கடந்த 27.1.2020ம் தேதி, வனத்துறையினர் அதிரடியாக பொக்லின் இயந்திரங்களோடு சூரியூர் சென்றனர். அங்கே வன கிராமவாசிகள் அமைத்திருந்த சிறு குடிசைகள், கீற்று கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். விளை நிலங்களையும் சேதப்படுத்தினர். இதையடுத்து, சூரியூர் விவகாரம் பெரும் விசுவரூபம் எடுத்துள்ளது.

வனத்துறையினர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி குடிசைகளை அகற்றியதாக சூரியூர் வனக்கிராம மக்கள் மீண்டும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் படியேற, இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. உத்தரவு வந்த கையோடு, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம் ஜன. 28ம் தேதி சூரியூரில் நேரில் விசாரணை நடத்திவிட்டுச் சென்றார். அப்போது அவர், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்; ஆனால், விளை நிலங்களையும், குடிசைகளில் இருந்த பொருள்களையும் நாசப்படுத்தியது விதிமீறல்,’ எனக்கூறினார்.

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் (மாஜிஸ்ட்ரேட், ஜே.எம்.-1) செந்தில்குமார், ஜன. 31ம் தேதி, மாலை 4 மணியளவில், சர்ச்சைக்குரிய சூரியூர் வனக்கிராமத்தில் நேரில் பார்வையிட்டார்.

வனத்துறை சார்பில் தெற்கு வனச்சரகர் சுப்ரமணியம், வனவர் குமார், வருவாய்த்துறை சார்பில் சேலம் வட்டாட்சியர் மாதேஸ்வரன், பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் சங்கீதா, குரால்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சதீஸ், மல்லூர் காவல் ஆய்வாளர் அம்சவள்ளி ஆகியோரும் ஆய்வின்போது உடன் இருந்தனர். வனக்கிராம மக்கள் தரப்பில் சூரியூரைச் சேர்ந்த முருகேசன், அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சந்திரசேகர், ஸாகிர் அஹ்மத், ஷாஜஹான் ஆகியோரும் உடனிருந்தனர்.

 

கடந்த 27ம் தேதி ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம், அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கக்கூடாது என்று கூறியதால், அவர்கள் தரப்பில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரச்னைக்குரிய மக்கள் சூரியூர் வனக்கிராமத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக இரவோடு இரவாக வனத்துறையினர், நுழைவுப் பகுதியிலேயே சோதனைச் சாவடி ஒன்றையும் அமைத்துள்ளனர். ஊருக்குள் செல்லும் வழித்தடத்தில் ஆறு அடி ஆழத்திற்கு குழியும் வெட்டி வைத்துள்ளனர்.

மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார்

சம்பவ இடங்களை
பார்வையிட்ட மாஜிஸ்ட்ரேட்
செந்தில்குமார், சூரியூர்
வனக்கிராமம், வருவாய்த்துறை
கட்டுப்பாட்டில் இல்லை
என்பது தெரிகிறது என்றார்.
அதற்கு சூரியூர் மக்கள்
தரப்பு வழக்கறிஞர்
ஸாகிர் அஹ்மத், ‘கடந்த
2001, 2002ம் ஆண்டுகளில்
வனத்துறையினரும், இந்த
கிராமம் தங்கள் கட்டுப்பாட்டிற்கு
உட்பட்டது இல்லை,’ என்று
தெரிவித்து உள்ளதாக கூறினார்.
பிறகு, நீதிமன்ற உத்தரவு
நகல் ஒன்றை
மாஜிஸ்ட்ரேட்டிடம்
காட்டினார்.

அதைப் படித்துப்பார்த்த
மாஜிஸ்ட்ரேட், ”வனக்கிராம
மக்கள் விவசாயம் செய்து
வருவதற்கோ, வீடுகள்
கட்டியிருந்ததற்கோ ஆதாரங்கள்
இல்லை. ஆனால் அதற்கான
சில குறியீடுகள் இருப்பதாகத்தான்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேநேரம் சர்ச்சைக்குரிய
இந்த பகுதி காப்புக்காடு
பகுதிதான் என்று
அறிவிக்கப்பட்டுவிட்டது.
சட்டத்திற்கு உட்பட்டு
இவர்களுக்கு என்ன செய்ய
முடியுமோ அதை செய்யலாம்.
அதற்காக 77 குடும்பத்தினருக்கு
279 ஏக்கர் நிலத்தை
வழங்க முடியாது,”
என்றார்.

 

வழக்கறிஞர் ஷாஜஹான்,
”சூரியூர் வனக்கிராமத்தில்
வனத்துறையினர் இதுவரை
நான்கு முறை ஆக்கிரமிப்புகளை
அகற்றி இருக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் நாங்கள்
நீதிமன்றத்தில் இதற்கான தடை
பெற்று வந்திருக்கிறோம். ஆனாலும்
வனத்துறையினர் தொடர்ந்து
இவ்வாறு செய்கின்றனர்,” என்று
மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறினார்.

 

அதற்கு மாஜிஸ்ட்ரேட்
செந்தில்குமார், ”நீதிமன்றம்
தடை உத்தரவு பிறப்பித்ததாகச்
சொல்ல முடியாது.
இவ்விவகாரத்தில் உரிய அமைப்பை
நாடுங்கள் என்றுதான் சொல்லி
இருக்கிறது. மேலும், சூரியூர்
வனக்கிராம மக்கள் கிளெய்ம்
செட்டில்மெண்ட் பெற
வேண்டுமெனில், பாரஸ்ட்
செட்டில்மெண்ட் அலுவலகத்தை
நாட வேண்டும்.

 

அதற்கு மீண்டும் குறுக்கிட்ட
வழக்கறிஞர் ஷாஜஹான்,
”சார்… இது மூன்று அடுக்கு
விசாரணை முறைகளைக் கொண்டது.
முதல் அடுக்கில் வருவாய்
கோட்டாட்சியர் இப்பிரச்னை
குறித்து விசாரித்து அறிக்கை
அளிக்க வேண்டும். அதன்பிறகுதான்
நாங்கள் மாவட்ட அளவிலான,
அதாவது ஆட்சியரை பார்க்க முடியும்.
அதன்பிறகு தமிழக அரசை
நாட வேண்டும். ஆனால் இதுவரை
கோட்டாட்சியரே விசாரணை
நடத்தி முடிக்கவில்லை. சூரியூர்
வனக்கிராமம் தொடர்பாக
இதுவரை கொடுக்கப்பட்ட
மனுக்கள் எதுவும் வருவாய்த்துறை
வசம் இல்லை என்கிறார்கள்,”
என்று கூறினார். அதற்கு
மாஜிஸ்ட்ரேட் பதில் ஏதும்
சொல்லாமல், மற்றொரு
இடத்திற்கு ஆய்வு
செய்ய சென்றார்.

முருகேசன்

சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு நடந்தது. இது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமாரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றபோது, ”சூரியூர் வனக்கிராமம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் எதுவும் சொல்ல முடியாது,” என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆய்வு முடிந்து அவர் காரில் ஏறி கிளம்பிச் செல்லும்போது, வனக்கிராம மக்கள் வழித்தடத்தில் திடீரென்று கீழே படுத்து புரண்டு அழுதனர். உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

 

இதுகுறித்து சூரியூர்
வனக்கிராமத்தைச் சேர்ந்த
முருகேசனிடம் கேட்டபோது,
”நாங்கள் மூன்று தலைமுறைகளாக,
75 ஆண்டுகளுக்கும் மேலாக
சூரியூர் வனக்கிராமத்தில் வசிக்கிறோம்.
வன உரிமை சட்டப்படி மலைப்பகுதியில்
வசிக்கும் பழங்குடிகள் அல்லது
மலைவாசிகளையோ அங்கிருந்து
அப்புறப்படுத்தக் கூடாது.
திடீரென்று வனத்துறையினர்
இந்தப் பகுதியை காப்புக்காடாக
அறிவித்து, திட்டமிட்டு எங்களை
அப்புறப்படுத்த பார்க்கிறது.

வழக்கறிஞர் ஷாஜஹான்

கடந்த 1984ம் ஆண்டு,
குடிசை வீடுகளுக்கு ஒரு
மின்விளக்கு திட்டத்தை
எம்ஜிஆர் கொண்டு வந்தார்.
அந்த திட்டத்தின் கீழ் எங்கள்
கிராமத்திற்கும் மின்வசதி செய்து
தருமாறு வருவாய்த்துறை
அதிகாரிகளிடம் கோரிக்கை
மனு அளித்தோம். அப்போதுதான்
அதிகாரிகள், சூரியூர் என்ற ஒரு
கிராமமே இல்லாதபோது,
நாங்கள் எப்படி மின்வசதி
செய்து தர முடியும்? என்று கேட்டனர்.
1905ம் ஆண்டின் வருவாய்த்துறையின்
‘அ’ பதிவேட்டில் சூரியூர்
கிராமம் இருந்தது.

 

1972ம் ஆண்டில் சேலம்
தாலுகா தனியாக பிரித்தபோதும்
இருந்த சூரியூர், அதன் பிறகே
அதிகாரிகள் கோல்மால் செய்து
எங்கள் கிராமத்தை
தொலைத்துவிட்டனர். அவர்களின்
தவறை மறைப்பதற்காக சூரியூர்
என்ற கிராமமே இல்லை என்று
பொய்யாக சொல்லி வருகின்றனர்.
எங்கள் கிராமத்தை மீட்பதற்காகவும்,
வனகிராமவாசிகளின் ஊரிமைகளை
மீட்டெடுக்கவும் 1992ம் ஆண்டில்
இருந்து 28 ஆண்டுகளாக
சட்டப்போராட்டம்
நடத்தி வருகிறோம்.

 

ஜல்லூத்து மலை, ஜருகுமலையை குறிப்பிட சூரியூர் வனக்கிராமத்தை சுட்டிக்காட்டிதான் எல்லை வரையறை செய்திருக்கிறார்கள். ஆனால், இப்போது வருவாய்த்துறையிடம் கேட்டால் சூரியூர் என்ற கிராமமே இல்லை என்கிறார்கள். அப்படி எனில் எங்கள் கிராமம் சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல காணாமல் போய்விட்டதா?

 

சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் 124வது கிராமம் பனமரத்துப்பட்டி, 125வது கிராமம் அத்திப்பட்டி, 126வது கிராமம்தான் சூரியூர். இப்போது வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய இரண்டு துறைகளின் ஆவணங்களிலும் எங்கள் ஊரைக் காணவில்லை. இல்லாத ஊரில், சொந்த நாட்டில் நாங்கள் அகதிகளைப் போல் வாழ்கிறோம். எங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு உரிய தீர்வு வழங்க வேண்டும்,” என்றார்.

 

இதுபற்றி சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமியிடம் கேட்டபோது, ”எந்த ஒரு நிலமும் வனத்துறைக்கு கையகப்படுத்துவதற்கு முன்பு, வருவாய்த்துறை வசம்தான் இருக்கும். 1889ம் ஆண்டில் ஜல்லூத்து மலை காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. அப்போது சூரியூர் கிராமம் சர்வே எண் 1 முதல் 52 வரையிலான பகுதிகளைக் கொண்டிருந்தது.

 

அதில், 1வது சர்வே எண்ணுக்கு உட்பட்ட பகுதிகளை சர்வே எண் 1/1, 1/2, 1/3 ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் 1/2 சர்வே எண்ணில் இருந்து ஒரு பகுதி பிரித்து ஜல்லூத்து மலையுடன் சேர்த்து 1889ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1/2 சர்வே எண்ணில் மீதமிருந்த பகுதியும், ச.எண். 1/2, 1/3 ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளும் ஜருகுமலையுடன் சேர்ந்த காப்புக்காடாக சேர்க்கப்படுவதாக 1926ம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

 

எஞ்சிய சர்வே எண் 2 முதல் 52 வரையிலான பகுதிகள் அனைத்தும் பனமரத்துப்பட்டி ஏரிக்காக கையகப்படுத்தப்பட்டு விட்டது. கடைசியாக சூரியூர் கிராமத்தின் எஞ்சியது ஒரே ஒரு வார்டு மட்டும்தான். அது குரால்நத்தம் அருகே இருக்கிறது. இப்போது பிரச்னை செய்பவர்கள், சிலரின் தவறான வழிகாட்டுதலால் தவறாக புரிந்து கொண்டு போராடி வருகின்றனர்,” என்றார்.

 

சூரியூர் கிராம மக்கள்
அங்குள்ள எல்லை பிடாரி
அம்மனை வழிபட்ட பிறகே
எந்த ஒரு பணிகளையும்
துவங்குகின்றனர். உள்ளூர் மக்கள்
பிடாரி அம்மனை சக்தி வாய்ந்த
தெய்வமாக கருதுவதோடு, என்ன
வேண்டுதல் வைக்கிறோமோ அதை
கட்டாயம் பிடாரி அம்மன் நிறைவேற்றித்
தருவாள் என்கிறார்கள். சூரியூர்
பிரச்னையிலும் சுமூக தீர்வு
கிடைக்கட்டும்.

 

– பேனாக்காரன்