Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: இலங்கை உடனான 3வது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்றது; தொடரையும் கைப்பற்றி அசத்தல்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் அற்புதமான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு நாள் தொடரையும் 2-1 கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இலங்கைக்கு கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகபட்டினத்தில் இன்று (டிசம்பர் 17, 2017) நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இன்றைய போட்டி, இரு அணிகளுக்கும் தொடரை வெல்லப்போவது யார் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். உபுல் தரங்காவின் அதிரடியால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது. சீரான ஆட்டத்தால் அந்த அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் ஹர்திக் பாண்டியாவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக முதல் 5 பந்துகளை பவுண்டரிகளாக ஓடவிட்டு மிரட்டினார் தரங்கா. ஆனால் 95 ரன்களில் (82 பந்துகள், 12 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) குல்தீப் யாதவ் பந்தில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார் தரங்கா. அவருடைய விக்கெட்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹலும், குல்தீப்பும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சரிவை வேகப்படுத்தினர். மொத்தமே 44.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை, 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு, கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதேநேரம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் மிகவும் அபாரமாக ஆடினார். ஷ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் துணையுடன் இறுதி வரை அவுட் ஆகாமல் (85 பந்துகளில் 100 ரன்கள், 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார் தவான்.

ஷ்ரேயாஸ் அய்யர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் இந்த தொடரில் அடிக்கும் இரண்டாவது அரை சதம் இதுவாகும். தினேஷ் கார்த்திக் அவுட் ஆகாமல் 26 ரன்களும் எடுத்தனர். 32.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை தொட்டு, அபார வெற்றி பெற்றது இந்தியா.

இதன் மூலமாக ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இந்தியா. இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை என்கிற இலங்கையின் சோகம் தொடர்கிறது. ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக ஷிகர் தவானும் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்து இரு அணிகள் இடையிலான 3 டி-20 போட்டிகளும் முறையே டிசம்பர் 20, 22, 24 தேதிகளில் நடக்கின்றன.