Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியல் அறையில் உள்ள தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்ததாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனி கபூர், மற்றும் இரு மகள்களுடன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி திருமண விழா முடிந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார்.

துபாய் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனை ஆய்விலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து துபாயில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் சடலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நீரில் மூழ்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மரணம் நிகழ்ந்தபோது அவருடைய குருதியில் ஆல்கஹால் (மது) கலந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக துபாயில் ஒளிபரப்பாகும் கல்ஃப் நியூஸ் சேனல், உடற்கூறியல் பரிசோதனை அறிக்கையுடன் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அவருடைய மரணத்தில் குற்றவியல் நோக்கம் இல்லை என்றும் செய்தி வெளியிட்டுள்ளது அந்த சேனல்.

ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள குளியலறைக்குச் சென்றவர் ‘பாத் டப்’-ல் குளிக்க முயன்றபோது போதையில் வழுக்கி விழுந்திருக்கலாம். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கக் கூடும் என்கிறார்கள், ஸ்ரீதேவிக்கு நெருக்கமான வட்டாரங்கள்.