Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

ஆசிரியர் நியமனத்தில் ஊழல்,
போலி சான்றிதழ் விவகாரங்களில்
சிக்கித் திணறி வரும் பெரியார்
பல்கலையில் விடைத்தாள்
கொள்முதல் செய்ததிலும்
பல லட்ச ரூபாய் ஊழல்
நடந்துள்ளதாக புதிதாக
மேலும் ஒரு புகார்
எழுந்துள்ளது.

 

சேலம் பெரியார் பல்கலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து வருகின்றனர். தவிர, இப்பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் எடப்பாடி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உறுப்புக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக்கல்லூரிகள் என 101 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன. பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், இணைவு கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

பல்கலை மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் நடத்தப்படும் பருவத்தேர்வுகளின்போது ஆள்மாறாட்டம், பேப்பர் சேஸிங் போன்ற முறைகேடுகளை களையும் நோக்கில், விடைத்தாள்களில் சம்பந்தப்பட்ட தேர்வரின் புகைப்படம் அச்சிட்டு, 35 பக்கங்கள் கொண்ட கட்டாக வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

 

பல்கலையின் நோக்கத்தில் பழுதில்லை என்றாலும், விடைத்தாள் கொள்முதல் செய்ததில்தான் கோளாறுகள் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது புகார்களை தட்டி விட்டிருக்கிறார்கள் மர்ம நபர்கள்.

 

கடந்த 2014-2015, 2015-2016, 2016-2017ம் கல்வி ஆண்டுகளின்போது புகைப்படம் அச்சிட்ட விடைத்தாள்களைக் கொள்முதல் செய்ய பெரியார் பல்கலை தரப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. யார் மிகக்குறைந்த விலைப்புள்ளி குறிப்பிடுகிறாரோ அவருக்கே ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். செய்யப்பட வேண்டும். ஆனால், அதிக விலைப்புள்ளி குறிப்பிட்டு இருந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு விடைத்தாள் அச்சிட்டு வழங்கும் பணிகள் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

 

இதில்தான் பல லட்சம்
ரூபாய் கைம்மாற்றப்பட்டதாக
இப்போது புது பூதம்
கிளம்பி இருக்கிறது.
இந்த ஊழல் குறித்து
விசாரிக்க, சென்னையில்
உள்ள லஞ்ச ஒழிப்பு
இயக்குநரகத்திற்கும்,
சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு
காவல்துறைக்கும் தொடர்ந்து
புகார்கள் வந்தன.
புகாரில் குறிப்பிட்ட
காலக்கட்டத்தில்
பெரியார் பல்கலை
துணை வேந்தராக சுவாமிநாதன்,
பதிவாளர்களாக அங்கமுத்து,
மணிவண்ணன், தேர்வாணையராக
பேராசிரியர் லீலா ஆகியோர்
பதவியில் இருந்துள்ளனர்.
இவர்கள் காலக்கட்டத்தில்தான்
விடைத்தாள் கொள்முதலில்
பெரும் ஊழல் நடந்துள்ளதாக
புகாரில் சொல்லப்பட்டு
இருக்கிறது.

முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன்

இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு ஏடிஎஸ்பி சந்திரமவுலி உத்தரவின்பேரில் ஆய்வாளர் தங்கமணி மற்றும் காவலர்கள் நேற்று (ஆகஸ்ட் 14) மாலை திடீரென்று பெரியார் பல்கலையின் தேர்வாணையர் அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கே ஓர் அறையில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய விடைத்தாள் கட்டுகள், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில கோப்புகளை வழக்கு விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் அள்ளிச்சென்றுள்ளனர்.

 

பல்கலை நிதி அலுவலர் சின்னுசாமி, தேர்வாணையர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜசேகர் ஆகியோரிடம் விடைத்தாள் கொள்முதலின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாகவும், ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் தொடர்பாகவும் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

புகாரில் சொல்லப்பட்டுள்ள
நபர்களில் அப்போது பதிவாளராக
இருந்த அங்கமுத்து,
முன்னாள் துணைவேந்தர்
சுவாமிநாதன்
பணிக்காலத்தின்போது பணம்
பெற்றுக்கொண்டு
உதவி பேராசிரியர்
பணியிடங்களை நிரப்பியதாகவும்,
அந்த ஊழலில் அவர் தன்னை
பலிகடாவாக்கப் பார்ப்பதாகவும்
கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு,
கடந்த 2017ம் ஆண்டு திடீரென்று
தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்குப் பிறகு பதிவாளராக
பொறுப்பேற்ற மணிவண்ணன்,
பணிக்காலம் முடிந்து
கடந்த 2018ம் ஆண்டில்
வெளியேறிவிட்டார்.
தேர்வாணையராக இருந்த
லீலாவும் ஓராண்டுக்கு முன்பு
பணிக்காலம் முடிந்து,
பல்கலையில் இருந்து
விடுபட்டுவிட்டார்.

 

இந்நிலையில், விடைத்தாள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது, பெரியார் பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

– பேனாக்காரன்