Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

கொரோனா வைரஸ் காரணமாக
ஊரடங்கு உத்தரவு அமலில்
உள்ள நிலையில், மறு உத்தரவு
வரும் வரை வங்கிகள்,
நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு
நிறுவனங்கள் உறுப்பினர்கள்,
வாடிக்கையாளர்களிடம் இருந்து
கடன் அசல், வட்டி
வசூலிக்கக்கூடாது என்று
தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.

 

கோரோனா வைரஸ்
நோய்த் தொற்றைத் தடுக்க
தீவிர நடவடிக்கைகளை
தமிழக அரசு போர்க்கால
அடிப்படையில் எடுத்து வருகிறது.
இதற்கென பொது மக்களின்
நன்மை கருதி, குற்றவியல்
நடைமுறைச் சட்டம் பிரிவு
144ன் படி, ஊரடங்கு உத்தரவு
உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை
விதித்து வருகின்றது.

இந்த உத்தரவுகளை அனைத்து
மாவட்டங்களிலும் முறையாக
நடைமுறைப்படுத்திட உத்தரவுகள்
வழங்கப்பட்டன. இதன்மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்,
மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர்கள்,
பொது சுகாதாரத்துறை
துணை இயக்குநர்கள்
ஆகியோருடன்
காணொலிக் காட்சி மூலம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தலைமையில் தலைமைச்
செயலகத்தில் இன்று
(மார்ச் 26) ஆலோசனை
நடத்தப்பட்டது.

 

கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்ப டுகின்றன.

 

* மார்ச் 31ம் தேதி வரை
பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு
உள்ளிட்ட அனைத்து உத்தரவுகளும்
அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி
வரை நீட்டிக்கப்படுகின்றது.

 

* ஊரடங்கு உத்தரவால் ஏற்படும்
இடையூறுகளை தவிர்க்கவும்,
மக்களுக்குத் தேவையான அனைத்து
அத்தியாவசிய சேவைகளும்
தடையின்றி கிடைக்கவும் மூத்த
ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட
9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு,
இப்பணிகள் தீவிரமாக
கண்காணிக்கப்படும்.

 

* பல கிராமங்களிலும், நகரங்களிலும்
தனியார் வங்கிகள், சிறிய
நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள்
ஆகியவை தினசரி, வாராந்திர,
மாத வட்டி மற்றும் அசலை
வசூல் செய்கின்றன. தற்போது
ஊரடங்கு உத்தரவினால் யாரும்
வேலைக்குச் செல்ல முடியாத
நிலையில், இதுபோன்ற பண வசூலை
உடனடியாக மறு உத்தரவு
வரும் வரை நிறுத்தி வைக்க
வேண்டும். இந்த உத்தரவை
மீறுவோர் மீது கடும் குற்றவியல்
நடவடிக்கைகள் தொடரப்படும்
என எச்சரிக்கப்படுகின்றனர்.

 

* பெரிய காய்கறி மார்க்கெட்,
சந்தை இருக்கும் இடங்களில்
மக்கள் அதிகமாக கூடுவதை
தவிர்க்கும் வகையில் காய்கறி,
பழ வகைகளை விற்கும் கடைகளை
விசாலமான இடங்களில் அல்லது
மைதானங்களில் அமைக்க வேண்டும்.
அப்போது, சோஷியல் டிஸ்டன்சிங்
விதிகளின்படி மக்களிடையே
3 அடி தூரம் இடைவெளி
இருக்க வேண்டும்.
மளிகைக்கடைகளிலும்,
மருந்து கடைகளிலும்,
காய்கறி கடைகளிலும்
சமூக விலகல் முறையை
தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.

 

* அதிக மக்கள் வாழும்
குடிசை மாற்று குடியிருப்புகள்,
பொதுமக்கள் அதிகம் கூடும்
வழிபாட்டுத்தலங்கள், சந்தைகள்,
பெரிய தெருக்கள் போன்ற
இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு
இயந்திரங்கள் மூலமாக
கிருமிநாசினி தெளிக்கப்பட
வேண்டும்.

 

* இந்த நோய்த்தொற்று
மிகமிகக் கடுமையானது.
இது ஒரு ஆட்கொல்லி நோய்.
இது மனித சமூகத்திற்கு
ஒரு பேரழிவை ஏற்படுத்த
வல்லது என்பதையும் மக்கள்
உணரும் வண்ணம் விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும்.
இதனையும், நோய்த்தடுப்பு
நடவடிக்கைகளையும் ஒலிபெருக்கி,
தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், துண்டுப்பிரசுரம் மூலம்
வீடு வீடாக விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும்.

 

* கர்ப்பிணிகள், ரத்தக்கொதிப்பு,
நீரிழிவு, காசநோய், ஹெச்ஐவி
தொற்று உள்ளோர் போன்றவர்கள்
அரசு மருத்துவமனைகளில் மருந்து,
மாத்திரைகள் பெறுகின்றனர்.
அவர்களுக்கு இரு மாதங்களுக்குத்
தேவையான மருந்து, மாத்திரைகள்
வழங்கப்பட வேண்டும்.

 

* அத்தியாவசியப் பொருள்களின்
உற்பத்தி மற்றும் நகர்வுகள்
தடையின்றி நடைபெற பெருநகர
சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும்,
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலும் உதவி மையம்
அமைக்கப்படும். இது தொடர்பான
கோரிக்கைகள் இருப்பின் அவற்றுக்கான
அத்தியாவசியச் சான்றிதழை
மாவட்ட ஆட்சியர் மற்றும்
சென்னை மாநகராட்சி ஆணையர்
வழங்குவார்கள்.

 

மருத்துவப் பொருள்களுக்கான
சான்றிதழ்களை தமிழ்நாடு
மருத்துவப் பணிகள் கழகம்,
அரசு மருத்துவமனை முதல்வர்கள்,
மருத்துவம் மற்றும் ஊரக
நலப்பணிகளின் இணை இயக்குநர்கள்
மற்றும் பொதுசுகாதாரத்துறை
துணை இயக்குநர்கள் ஆகியோர்
வழங்குவர்.

 

அத்தியாவசியப் பொருள்கள் நகர்வு செய்யும் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியார் பணியாளர்களுக்கும், சென்னை உள்பட அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர்முக உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

* மின் வணிக நிறுவனங்களான குரோபர்ஸ், அமேசான், பிக்பாஸ்கெட், பிளிப்கார்ட், டன்சோ போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், இப்பொருள்களை மற்ற நிறுவனங்களும் அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக்கடைகளும், கூட்டுறவு விற்பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

 

* சொமாட்டோ, ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும். எனினும், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் தாங்களாகவே சமைக்க இயலாதோர் ஆகியோர் மெஸ், சிறு சமையலகங்கள் மூலம் ஏற்கனவே தங்கள் உணவுகளை பெற்று விடுகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படுகிறது.

 

இத்தகைய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநர்கள், அடையாள அட்டை வைத்திருப்பதை சம்பந்தப்பட்ட வாகனங்களில் அத்தியாவசிய சேவைக்காக என்று வில்லைகள் ஒட்டியிருப்பதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

 

அதேபோன்று, காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளை பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.

 

* வேளாண்மைத்துறை விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியத் துறை என்பதால், விவசாயத் தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றின் நகர்வு அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் வேளாண் விளை பொருள்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்வதும் அனுமதிக்கப்படுகிறது.

 

* கால்நடை, கோழி, மீன், முட்டை,
கால்நடைத்தீவனம் ஆகியவற்றின்
நகர்வுகளும் அனுமதிக்கப்படுகின்றது.
இதில் சிரமங்கள் ஏதும் இருந்தால்,
காவல்துறை தலைமையக
கட்டுப்பாட்டு அறையை
044-28447701, 044-28447703 ஆகிய
எண்களில் 24 மணி நேரமும்
தொடர்பு கொள்ளலாம்.

 

* முதியோர், நோயாளிகள்,
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும்
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்,
டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர்
ஆகியோருக்கு அவசர உதவி
தேவைப்பட்டால், அவர்கள் 108
எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
108 ஆம்புலன்ஸ் சேவையுடன்,
இச்சேவையையும் இணைத்து
செயல்பட வேண்டும்.

 

* அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணம் முழுமையாக பயனாளிகளை சென்றடைவதையும், இவை வழங்கும்போது சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் அந்தந்த மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்றவாறு, தேவைப்படின் நிவாரணத் தொகை மற்றும் பொருள்களை அவரவர் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்யலாம். நோய்த்தொற்றினை தடுக்கும் விதத்தில், கை ரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதை தற்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

* வெளிநாட்டில் இருந்து
வந்த சுமார் 54 ஆயிரம் பேர்களின்
பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம்
வழங்கப்பட்டுள்ளது. இவர்களை
அவரவர் வீடுகளிலேயே
தனிமைப்படுத்த வேண்டும்.
அவர்கள் வெளியே வராதவாறு
தீவிரமாக கண்காணிக்க
உத்தரவிடப்படுகிறது.

 

* கொரோனா தொற்று
உள்ளவர்களிடம் தொடர்பில்
இருந்தோர், அவரவர் வீடுகளில்
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு
உள்ளனர். இத்தகைய குடும்பத்தினர்
வெளியில் வருவது முற்றிலுமாக
தடை செய்யப்பட்டு உள்ளதால்,
அவர்களுக்கு தேவையான
அத்தியாவசியப் பொருள்களை
மாவட்ட ஆட்சியர்கள்
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்
வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும். இதையும் மீறி
வெளியில் வருவோர் மீது
அபராதம் விதிப்பதோடு, தகுந்த
பிரிவுகளின் கீழ் குற்றவியல்
நடவடிக்கையும் எடுக்கப்படும்.

 

மேற்கண்ட இந்த அனைத்து நடவடிக்கைகளும், பொது மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எடுக்கப்படுபவை. இதனை உணர்ந்து, அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் தவறாது தீவிரமாக கடைபிடித்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

 

விழித்திரு, விலகி இரு, வீட்டிலேயே இரு என்ற கோட்பாட்டினை இந்த சவாலான நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாகக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.