Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மூத்த தலைவர்களுள் ஒருவரான,
தோழர் தா.பாண்டியன் (88)
உடல்நலக் குறைவால்,
வெள்ளிக்கிழமை (பிப். 26)
இயற்கை எய்தினார்.

 

இந்திய கம்யூ., கட்சியின்
மூத்த தலைவர்களுள் ஒருவரும்,
முன்னாள் மாநிலச் செயலாளருமான
தா.பாண்டியன், கடந்த சில
ஆண்டுகளாகவே சிறுநீரக
கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
பிப். 24ம் தேதி அவருடைய
உடல்நலம் மிகவும் மோசமடைந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக
சென்னை ராஜிவ்காந்தி
அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார்.

 

எனினும்,
அவருடைய உடல்நிலையில்
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பிப். 25ம் தேதி மாலையில் அவருக்கு
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
தீவிர சிகச்சை அளித்தும் பலன்
அளிக்காத நிலையில்,
வெள்ளிக்கிழமை (பிப். 26)
காலை 10.05 மணியளவில்
அவர் உயிரிழந்தார்.

 

மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி அருகே உள்ள
வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த
தாவீது – நவமணி தம்பதியின்
நான்காவது மகனாக,
1932ம் ஆண்டு மே 18ம் தேதி
பிறந்தார் தா.பாண்டியன்.
இவருடைய பெற்றோர்
ஆசிரியர்களாக பணியாற்றி
வந்தனர். காமக்காப்பட்டி
கள்ளர் சீரமைப்புத் துறைப்
பள்ளியில் தொடக்கக் கல்வியையும்,
உசிலம்பட்டி வாரிய
உயர்நிலைப்பள்ளியில்
உயர்நிலைக் கல்வியையும்
பயின்றார்.

 

ஆசிரியராக…:

 

இதையடுத்து,
காரைக்குடி அழகப்பா
பல்கலையில் புகுமுக வகுப்பில்
சேர்ந்தார். அதே கல்லூரியில்
ஆங்கில ஆசிரியராகவும்
பணியாற்றினார். அதன்பிறகு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்
முழுநேர தொண்டராக இணைந்தார்.
கட்சியின் கலை, இலக்கியப்
பிரிவான தமிழ்நாடு கலை
இலக்கிய பெருமன்றத்தின்
முதல் பொதுச்செயலாளராகவும்
பணியாற்றினார் தா.பாண்டியன்.

 

இதையடுத்து,
பெற்றோர் பார்த்து முடிவு செய்த
ஜாய்ஸ் என்ற பெண்ணை திருமணம்
செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு
டேவிட் ஜவஹர் என்ற மகனும்,
அருணா, பிரேமா ஆகிய இரு
மகள்களும் உள்ளனர்.
பின்னர் சென்னைக்கு வந்த
தா.பாண்டியன், சட்டம் பயின்றார்.
இந்தக் காலக்கட்டத்தில்தான்
அவர் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியில் தீவிரமாக
செயல்பட்டு வந்தார்.

 

மனைவியின் பண உதவி:

 

கட்சியில் முழு நேர ஊழியராக
மக்கள் பணியாற்றும் தோழர்களுக்கு
கணிசமான ஊதியம் வழங்கப்படும்.
அதன்படி, தா.பாண்டியனுக்கும்
இந்திய கம்யூ., கட்சி சார்பில்
மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை
ஊதியமாக வழங்கப்பட்டது.
அந்த ஊதியம் போதாத நிலையில்,
அவருடைய மனைவி ஜாய்ஸ்
காரைக்குடியில் வேலைக்குச் சென்று,
அதன் மூலம் கிடைத்த பணத்தை
தா.பாண்டியனுக்கு மாதந்தோறும்
அனுப்பி வைத்துள்ளார்.

 

அதன்பிறகு, 1989ல் மொஹித் சென், கல்யாணசுந்தரம், டாங்கே, சு.பழனிசாமி ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கிய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டார். இக்காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவராக இருந்தார். ஐக்கிய கம்யூ., கட்சியில் இருக்கும்போதுதான் 1989, 1991 என இரண்டு முறை அவர் வட சென்னை தொகுதியில் காங்கிஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு, மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

 

எல்டிடிஇ மீதான எதிர்ப்பும் ஆதரவும்:

 

ராஜிவ் காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள், தமிழ்நாடு வரும்போது அவர்களுடைய பேச்சுகளை தா.பாண்டியனே மொழிபெயர்ப்பார். 1991 மே 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி பேச வேண்டிய கூட்டத்திலும் அவரே மொழிபெயர்ப்பாளராக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தார். ஆனால், குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட, தா.பாண்டியனும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் 2005ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தா.பாண்டியன், மூன்று முறை தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்தார். கட்சியின் தேசியக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ராஜிவ்காந்தி மரணத்திற்குப் பிறகு, எல்டிடிஇ அமைப்பை கடுமையாக விமர்சித்து வந்தார். எனினும், ஈழப்போரின் இறுதி நாள்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அதேபோல, கூடங்குளம் அணு உலை திட்டத்தை பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்த்து வந்த நிலையில், தா.பாண்டியன் ஆதரித்தார்.

 

உதயமான 8 அடுக்குமாடி:

 

தா.பாண்டியன் மாநிலச்
செயலாளராக இருந்தபோதுதான்,
சென்னை தி.நகரில் உள்ள
கட்சியின் மாநிலத் தலைமையகமான
பாலன் இல்லம் இடிக்கப்பட்டு,
மிகப்பெரிய 8 அடுக்கு
மாடிக்கட்டடமாக
கட்டப்பட்டது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு
அவருக்கு சிறுநீரக செயலிழப்பு
ஏற்பட்டது. அந்த நிலையிலும்
அவர் தொடர்ச்சியாக கட்சி
நிகழ்ச்சிகலில் கலந்து கொண்டார்.
கடந்த 18ம் தேதி மதுரையில் நடந்த
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுப்
பேசினார், தா.பாண்டியன்.
அதன்பிறகு ஒரு திருமண
நிகழ்ச்சியிலும் கலந்து
கொண்டார்.

 

இந்த நிலையில்தான், பிப். 24ம் தேதியன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, பிப். 26ம் தேதி அவர் இயற்கை எய்தினார்.

 

இறுதிச்சடங்கு:

 

தியாகராயநகரில் உள்ள
கட்சியின் தலைமை அலுவலகத்தில்
பொதுமக்கள் அஞ்சலிக்காக
பகல் 2 மணி முதல் இரவு 8 மணி
வரை வைக்கப்பட்டது.
சனிக்கிழமையன்று
சொந்த ஊரில் இறுதி சடங்குகள்
நடக்கின்றன.

 

உழைக்கும் வர்க்கத்தின்
குரலாக ஓங்கி ஒலித்த,
தோழர் தா.பாண்டியனின் மறைவு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும்,
பாட்டாளி வர்க்கத்திற்கும்
பேரிழப்பு.

 

– பேனாக்காரன்