Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

பொதுத்துறை பங்குகளை
விற்பனை செய்வதன் மூலம்
1.75 லட்சம் கோடி ரூபாய்
நிதி திரட்ட திட்டமிடப்பட்டு
உள்ளதாக மத்திய பட்ஜெட்
அறிக்கையின்போது நிதியமைச்சர் 
நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

கொரோனா பெருந்தொற்றால்
ஒட்டுமொத்த துறைகளும்
கிட்டத்தட்ட ஓராண்டாக
பெரும் சரிவைச் சந்தித்திருந்த
நிலையில், மத்திய அரசின்
நடப்பு 2021-2022ம்
நிதியாண்டுக்கான பட்ஜெட்,
திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல்
செய்யப்பட்டது. நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் பட்ஜெட்
தாக்கல் செய்தார். அவர்
தாக்கல் செய்யும் மூன்றாவது
நிதி நிலை அறிக்கை இது.

இந்த பட்ஜெட் தாக்கலுக்கு
முன்பே, பெரும்பாலும்
தனியார்மயம் ஊக்குவிக்கப்படும்
என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கேப பங்கு விலக்கல்
குறித்த அறிவிப்பும் வெளியானது.

நிதி பற்றாக்குறையை
சமாளிக்க பொதுத்துறை
பங்குகளை ஐபிஓ எனப்படும்
ஆரம்பநிலை பங்கு விற்பனை
மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய்
திரட்டப்படும் என மத்திய
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு
உள்ளது.

அதன்படி,
இந்திய ஆயுள் காப்பீட்டு
நிறுவனத்தின் (எல்ஐசி) ஐபிஓ
வெளியிட திட்டமிடப்பட்டு
உள்ளது. மேலும், ஏர் இந்தியா,
பாரத் பெட்ரோலியம்,
கன்டெய்னர் கார்ப்பரேஷன்,
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆகிய
பொதுத்துறை நிறுவனங்களும்
தனியார் மயமாக்கப்படுவதன்
மூலம் நிதி திரட்ட
உத்தேசித்துள்ளது. இரண்டு
வங்கிகளின் பங்குகளும்
விற்பனை செய்யப்பட உள்ளன.

கடந்த பத்தாண்டுகளில்
பங்கு விலக்கல் கொள்கை முலம்
பெரிய அளவில் நிதி திரட்ட
இயலவில்லை. அதிகபட்சமாக
2019-2020ம் நிதியாண்டில்
1.05 லட்சம் கோடி ரூபாய்
நிதி திரட்ட இலக்கு
நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், பங்கு விலக்கல் மூலம்
50304 கோடி ரூபாய் மட்டுமே
நிதி திரட்ட முடிந்தது.
இதனால் நிதிப்பற்றாக்குறை
அதிகரித்தது. வரும் நிதியாண்டில்
பங்குகள் விற்பனை மூலம்
இலக்கை அடைவோம் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பட்ஜெட்
உரையின்போது நிர்மலா சீதாராமன்
தெரிவித்துள்ளார்.